ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்

Main menu:

Site search

Meta

Archives

Categories

Recent Posts

Recent Comments

Tags


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Tamilish ulavu.com

தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

தமிழர்கள் முதன்முதலில் பஞ்சபூதங்களில் தலையாயதாகிய சூரியன், சந்திரன், அக்கினி ஆகியவைகளை வணங்கினர்.

“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – என்புருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ்பிரிந்த நான்.”

எனத் தீபமேற்றி, ஒளியை (சூரியன், சந்திரன், அக்கினி) வணங்கி வந்தனர். உருவ வழிபாடு இல்லை. பின்னர், மூத்தவர்கள், இறைபக்தியை வளர்ப்பதற்காக, தன் குடும்பத்தில் மறைந்த மூத்தவர்களின் நினைவாக ஒரு கல்லை நட்டு, அதையே மற்றவர்கள் தெய்வமாக வணங்குதல் வேண்டும் என்றனர். குடும்பத்தில் மற்றவரும், மூத்தோர் சொல்லுக்குப் பணிந்து வணங்கினர். இதையே, குலதெய்வம் என்றனர். இதுவே மூலம்.

போரில் மாண்ட வீரர்களுக்கு நடுகல்லிட்டுப் படையலிட்டு வழிபட்டனர். வீரச் செயல்கள் புரிந்தவர்கள் இறந்ததும் அவர்களையும் வழிபட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உருவம் கொடுத்து, சாங்கியங்கள் செய்ய ஆரம்பித்தனர்.

இவர்களே காவல் தெய்வங்கள்.

பி.கு: இதில் காணும் கட்டுரைகளுக்கு மூலம் தாளிகைகள், சக்தி விகடன். அவர்களுக்கு நன்றி.

******************************************************************************

தவசி ஆண்டி, மேல உரப்பனூர்

************************************

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வடமேற்கே ராஜதானி மேல உரப்பனூர். இக்கிராமத்தின் வடஎல்லையில் புளியந்தோப்புக்குள் சிறிய திண்டில் அடங்கியுள்ளார் “தவசி ஆண்டி”.

 


பல்லாண்டுகளுக்குமுன் தலித் மக்களுக்குத் தத்து(வ)க் கடவுளாக வந்து சேர்ந்தார். இப்பொழுதும் சாமியாடி, பூசாரி ஆகியோர்கள் அவ்வி்னத்து மக்களே. ஆயினும் அவ்வூர் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சாதி, இனப்பாகுபாடின்றி தவசி ஆண்டியை வழிபட்டு வருகின்றனர். தவசி ஆண்டிக்குத் தலபுராணம் ஒன்றும் தெரியவில்லை. ஆயினும் திருமங்கலம் வட்டரத்திலே அவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது.


“கண்மாய்க்கரையில் தவசி ஆண்டி சக்தியுள்ள தெய்வமாக அமர்ந்திருந்து, கண்மாயைக் காத்தி, கழனி செழிக்க வைத்து, பசியில்லாது கஞ்சி ஊற்றுகிறார்” என்னும் அசைக்கமுடியா நம்பிக்கை வைத்துள்ளனர் அவ்வூர் மக்கள். தங்கள் கழனிகளில் விளையும் விளைச்சலில் ஒருபங்கைக் காணிக்கையாகக் கொடுத்துவிடுகின்றனர். அதன்பின் மிச்சம்தான் வீடுகளுக்குச் செல்லுகிறது.


கார்த்திகை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை தவசிக்குத் திருவிழா. காணிக்கையாய் வந்த நெல்மூட்டைகளை விற்று 50,000க்குக் குறையாமல் வாழைப்பழங்கள் வாங்கப்பட்டு கோயிலுக்கு கொண்டுவரப்படும். இரண்டு எருமை மாடுகளைக் காலையிலிருந்தே பால் கறக்காமல் விட்டு விடுகிறார்கள். இந்த மாடுகளின் மடியில் தவசிப் பூசாரி விபூதி இட்டுவிட்டால் கன்றுகள் மடியைத் தேடி வராதாம்! திருவிழா தினத்தன்று காலை முதலே தவசி கோயில் பூசாரியும் சாமியாடியும் தண்ணீர்கூடப் பல்லில் விழாமல் விரதம் இருக்கிறார்கள்.

ஊருக்குள்ளிருக்கும் (தவசியின்) அணிகலன்கள் உள்ள பெட்டி ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். வழிநெடுக மக்கள் பயபக்தியுடன் அப்பெட்டியை வணங்கி மாலை மரியாதைகள் செய்து அனுப்பி வைக்கின்றனர். ஊர் எல்லை வரை பெண்களும் ஊர்வலத்தில் கலந்துகொண்டு எல்லை வந்ததும் நின்றுவிடுகின்றனர். ஆண்கள் மட்டும் எல்லைக்குள் நுழைகின்றனர். இரவு 12 மணிக்கு எருமைகளைக் கறந்து பால்
எடுக்கின்றனர். அதன்பின் பாலில் பழம் கரைத்து ஆண்டிக்கு முழுக்காட்டு செய்கிறார்கள். அந்த அபிசேக பிரசாதத்தைக் கொண்டு பூசாரியும், சாமியாடியும் தங்களின் விரதத்தை முடிக்கின்றனர்.


தவசிக்கு எதிரே இருக்கும் ஆலமரத்தினடியில் அமைதியாக மக்கள் அனைவரும் அமர்திருக்கின்றனர். பூசாரி எழுந்து”கண்மாய் கரை பெருகணும்; காடு கண்ணி விளையணும்; ஊரு மக்களைக் காப்பாத்தணும்; நல்ல குறி சொல்லப்பா! தவசி ஆண்டி!” என்பார். இதற்குப் பிறகு ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவுக்கு அமைதி நிலவும். அடுத்த சில நிமிடங்களில் அவ்வால மரத்திலிருந்து கெளளி(பல்லி) கணீரென ஒலி எழுப்பும். கூடியிருக்கும் மக்கள்
கூட்டம் அனைவரின் முகத்திலும் நிம்மதி கலந்த மகிழ்ச்சி மலரும். கெளளி சொல்லச் சற்றே தாமதமானால்,”யாரோ தப்பு தண்டா பண்ணியிருக்காங்க போலிருக்கு. அதுதான் குறி சொல்லத் தாமதம்” என ஒருவர் சொன்னவுடன், ஊர் பெரியவர் முதல் அனைவரும் பூசாரி காலில் விழுந்து,”தெரிஞ்சோ தெரியாமலோ யார் தப்பு செஞ்சாலும் நீ தான்பொருத்துக்கணும்!” எனப் பூசாரி மனமுருக வேண்டுவார். பின்னர் பூசாரியிடம் விபூதி வாங்கி அனைவரும் இட்டுக்கொண்டு அமைதி காப்பார்கள். குறி கூறிவிடுவார் தவசி ஆண்டி. குறி கேட்காமல் மக்கள் ஊர் திரும்புவதில்லை.

 

சிலஆண்டுகளுக்குமுன் 2 நாட்கள் தவசி ஆண்டி சோதித்து விட்டாராம். பின்னர் வாழைப்பழங்கள் பங்கீடு செய்யப்பட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் கொடுக்கப்படும்.

சாதி சமயச் சண்டைகளை தூண்டிவிட்டுத் தான் வாழும் பெரிய மனிதர்களின் மத்தியில் வேறுபாடின்றி அனைவரும் தவசி ஆண்டி சந்நிதியில் கலந்து வழிபடுவது தவசி ஆண்டியின் மகிமைதான்.

திங்களூர் – கோபுரம்

திங்களூர் – கோபுரம்
***********************
திருவாளர் சந்திரன் குடிகொண்டுள்ள இடம். சந்திரனுக்குப் பரிகாரம் செய்பவர்கள் இங்குதான் செய்கிறார்கள். கூட்டத்துக்குப் பஞ்சமில்லை. படம் எடுக்கத் தடை. இருப்பினும் கோபுரத்தை எடுத்து வந்துவிட்டேன்.

சண்முகநாதப் பெருமான் – குன்றக்குடி

சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியன் மன்னன் பெரிய மருதுவுக்கு முதுகில் “இராசபிளவை” என்னும் கடுமையான கட்டி வந்தது.
அப்பொழுது குன்றக்குடியில் உப்பு வணிகம் செய்து வந்த காடன் செட்டியாரை அணுகினார். அவரும் குன்றக்குடியானை மனதில் வேண்டி விபூதி கொடுத்தார். பெரிய மருதுவின் துன்பம் நீங்கியது. அன்றிலிருந்து குன்றக்குடி சண்முகநாதப் பெருமானின் மீது அளவற்ற பக்திகொண்டான். குதிரையி வரும்பொழுது எந்த இடத்தில் கோயில் தென்படுகிறதோ, அதே இடத்தில் குதிரையை விட்டு இறங்கி கோயில் வரை நடந்தே வருவாராம்.

மயில் படுத்து அடைகாப்பதைப்போன்ற மலையின்மீது பெருமானுக்குத் திருக்கோயில் எழுப்பினான். மலையின் சுற்றளவு 1 கல் தொலைவு. கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு. மலையேறும் படிகள் மயிலின் தோகை போலிருக்கும். ஒட்டுமொத்தமாய், முருகனின் வாகனமே அவனிருக்கும் மலையாக இருப்பதே குன்றக்குடியின் விதப்பு. மலையின் 120 படிகளும் கல்வெட்டுக்கள்தான். நேர்த்திக்கடனுக்காகப் பக்தர்கள் செதுக்கியவைகள்.

கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், தொண்டி, மீமிசல், திருவாடனை, தேவிபட்டினம் போன்ற கடலோரப் பகுதிகளிலுள்ள மீனவர்களின் மனதில் உறையும் தெய்வம் சண்முகநாதப் பெருமான். திருவாடனை அருகேயுள்ள விசும்பூர் கிராமத்திற்கும் குன்றக்குடிக்கும் 60 கல் தொலைவு. விசும்பூரில் கோயில் இல்லை. அவ்வூரில் உள்ளவர் அனைவருக்கும் குன்றக்குடியான்தான் குலதெய்வம். பங்குனி உத்திரத்தன்று ஒட்டுமொத்தக் கி்ராமமும் குன்றக்குடி வரும். அக்கினிக் காவடி, பறவைக் காவடி, பால்காவடி, தேர்க்காவடி, இழுவைக்காவடி ஆகியவைகள் சுமந்து வரும் பக்தர்கள் காணக் கண் கோடிவேண்டும். பயிரிட்டவர்கள் விளைச்சலில் ஒரு பகுதியை வைக்கோலுக்குள் வைத்து உருண்டையாகக் கட்டித் தலையி சுமந்து வந்து செலுத்தும் “கோட்டைக் காவடி”யை இங்கு மட்டுமே காணவியலும்.மருதுபாண்டியர் சண்முகநாதனுக்கு ஊருலவர் (உற்சவர்) உருவம் செய்யப்பணித்தான். சிற்பியிடம் சிறுவனாக வந்து சண்முகநாதன் குடிக்கத் தண்ணீர் கேட்க, சினத்திலிருந்த சிற்பி, அருகில் சூடாக காய்ச்சி வைத்திருந்த உலோகக் கலவையைக் குடிக்குமாறு பணித்தான். அதைக் குடித்த சிறுவனே ஊருலவராக மாறியதாக ஊரிலுள்ளோர் கூறுகின்றனர்.
விழாக்காலத்தே திருவீது உலாவரும் தங்க இரதம், வெள்ளி இரதம் ஆகியவற்றை இரு காளைகள் இழுத்து வரும். அவைகள் இறந்துபட்டால் சண்முகநாதப் பெருமான் பாதரக்குடி கிராமத்தில் உள்ளவர்களின் கனவில் வந்து, இன்ன ஊரில் இன்னாரிடம் உள்ள காளைகளை வாங்கி வா” என உத்தரவிடுவாராம். அப்படியே சென்று வாங்கிவந்து கோயிலுக்குத் தரும் பழக்கம் இன்னமும் தொடர்ந்து வரும் ஒன்று.

அருள்மிகு நரசிங்கர் – சிங்கர்குடி

“திருமலாபுரம்” எனக் கல்வெட்டுக்களில் குறிக்கப்படும் “சிங்கர்கோயில்” இன்று “சிங்கர்குடி” என விளங்குகிறது.

கடலூரிலிருந்து புதுவை செல்லும் வழியில் 13 கல் தொலைவில் உள்ள தவளக்குப்பத்தின் மேற்கே 2 கல் தொலைவில் உள்ளது.

சீற்றமே வடிவான உக்கிர நரசிங்கர், தன் பக்தனான பிரகலாதனுக்காக சிங்கர்குடிக்குத் தானே வந்தமர்ந்து காட்சி தருகிறார்.

>



நிமிச் சக்கரவர்த்தி யாகங்கள் பலவும் நடத்தியதால் அவனுக்கு விண்ணோர் வரமளிக்கவும் சாபமிடவும் வல்லமையைக் கொடுத்தனர். இந்திர யாகம் செய்ய நினைத்த நிமி தன் குலகுருவான வசிட்டரிடம் சென்று நடத்தித் தருமாறு வேண்டினான். அந்நாளில் முன்னமேயே வேறு இடத்தில் யாகம் செய்ய ஒப்புக்கொண்டதால், “யாரையேனும் வைத்து செய்துகொள்; வந்து ஆசி தருகிறேன்” என்றார் வசிட்டர். நிமி, கவுசிக முனிவரை வைத்து யாகத்தை முடித்துவிட்டுக் களைப்பில் அயர்ந்து உறங்கும் வேளையில் வந்தார் வசிட்டர். தன்னை வரவேற்க நிமி வராததும், தன் எதிரியான கவுசிகனை வைத்து யாகம் நடத்தியதாலும் சினமுற்ற வசிட்டர், “நிமியே! உன் உயிர் உடலற்று அருவமாக உலவுதாகுக!” என சாபமிட்டார். அதற்கு நிமியும்,”உறங்குபவனைச் சபித்தல் முனிவருக்கு அழகல்ல; என்னைப்போல் நீங்களும் ஆகுக!” என பதிலுக்குச் சபித்தான். நிமிக்குச் சாபம் நீங்க யாகம் செய்யப் பல முனிவர்கள் முன் வந்தனர். ஆயினும், நிமி, “நான் இப்படியே உலகில் உள்ள எல்லோர் விழிகளிலும் இருந்து பெருமாளைத் தரிசனம் செய்தால் போதும்” என்றான். வசிட்டர், பிரமனின் அறிவுரைப்படி சிங்கர்குடி சென்று தவமியற்றிச் சாப விமோசனம் பெற்றார்.

திருக்கோயில் மேற்கு நோக்கி உள்ளது. அரசகோபுரம் கடந்து உள்ளே நுழைந்து இடதுபுறமுள்ள அன்னை கனக துர்க்கையை வணங்கிப்பின் அழகிய சிற்பவேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் நிறைந்த மண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்தயடுத்து, திருமகளின் அமிசமான ஆண்டாள் எனப்படும் கோதை நாச்சியாரைக் கண்டு வணங்கலாம். பின்னர் வெளிவந்து வலம் வரும்பொழுது கோயிலின் பின்புறம் வெள்ளிக் கிழமை மண்டபத்தைக் காணலாம். இதில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பெருமாள் தன் பிராட்டியுடன் ஊஞ்சலாடுவார். நரசிங்கரின் சந்நிதிக்கு இடப்புறம் கனகவல்லித் தாயாரின் கருவறை.




நரசிங்கரின் கருவறைக்குள் நுழையுமுன் வசிட்ட விநாயகராம் தும்பிக்கை ஆழ்வாரை வணங்கி உட்புகல் வேண்டும்.

கொடிமரம், கருட ஆழ்வார் ஆகியோரை வணங்கிப்பின் உட்செல்ல எம்பிரானின் நெடிதுயன்ற உக்கிரப் பெருவடிவாய்ப் பதினாறு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம், பதாக ஹஸ்தம், குறுவாள், சூலம்(களம்), வில், கதை, கேடயம் தாங்கியுள்ளார். எஞ்சியுள்ள எட்டுக்கரங்களையும், கம்பர்:“வகிர்ப்படுத்து உரக்கும்; பற்றி வாய்களைப் பிளக்கும்; வன்தோல்
துகிற் படுத்து உரிக்கும்; செந்தீக் கண்களைச் சூலும்; சுற்றிப்
பகிர்ப் படக் குடரைக் கொய்யும்; பசை அறப் பிசையும்; பல் கால்;
உகிர்ப் புரைப் புக்கோர் தம்மை உகிர்களல் உறக்கும், ஊன்றி,”
வருணிக்கிறார்.

உக்கிர நரசிங்கரின் கீழே இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலப்புறம் நோக்கிய யோக நரசிங்கரும், பால நரசிங்கரும் உள்ளனர்.

உக்கிர நரசிங்கரை வணங்க உற்ற வினைகள் ஓடிப் போகும்.


செண்பகவனத்து செல்வ கணபதி

யாரும் எக்காரியத்தையும் ஆனைமுகத்தோனைத் தொழாது செய்யத் துடங்குவதில்லை. அவர் ஓங்கரத் தத்துவத்தின் மூலாதாரம். எளிமையானர்; விண்ணோர்கள் முதலாய் அனைவராலும் வணங்கப் படுபவர்.வேலூரிலிருந்து பெங்களூர் சாலையில் 3 கல் தொலைவில் உள்ள சேண்பாக்கம் தான் செண்பக வனம்.

பண்டைய காலத்தே செண்பக வனமாய் இருந்த இவ்விடம், தற்பொழுது சேண்பாக்கமாக மருவி இருக்கலாம். சுயம்புவாகக் கணபதி உள்ள இடம் என்பதால் “ஸ்வயம்பாக்கம்” என ஆதி சங்கரர் பெயரிட்டார்; அது பின்னர் சேண்பாக்கமாக மருவியிருக்கலாம் என்பது மறு சாரார் கருதுகோள்.

இங்கும் சுயம்பு இலிங்கமாகக் கணபதி அமர்ந்து அருள் மழை பொழிகிறார். இங்குள்ள மற்ற 10 கணபதிகளும் சுயம்பு இலிங்கங்களாகவே காட்சியளிக்கின்றனர். அதில் ஒருவர் தரை மட்டத்தில் உள்ளார். அது மண் தத்துவத்தை நினைவூட்டுவதாயுள்ளது. இப்பதினொரு சுயம்பு இலிங்கங்களும் “ஓம்” என்னும் அமைப்பில் உள்ளதுதான் விதப்பு(சிறப்பு). தல விருட்சம் வன்னி மரம்.

துக்கோஜி எனும் மகாராட்டிர மந்திரி, அவ்வழியே இரவு வேளையில் இரதத்தில் பயணிக்கும்பொழுது ஏதோ ஒன்றின்மேல் முட்டி, அச்சு முறிந்து இரதம் நின்று விட்டது. கீழிறங்கிப் பார்க்க இரத்தக் கறை தெரிந்தது.
அடிபட்டது யார் எனத் தெரியாது விழிக்கையிலே, அவருக்குக் கணபதி,” நாம்தான் இங்கு உள்ளோம்; எமக்கு இங்கேயே ஆலயம் எழுப்பு” என்று உணர்த்தினாராம். அவர் கட்டிய ஆலயம் என தலபுராணம் கூறும்.

இத்தலத்தின் சிறப்புகள்:

1.மூலவரின் முதுகில் இரதச் சக்கரம் ஏறிய வடு உள்ளது.
2.மேற்கூரை இல்லை. விண்ணோர்கள் தொழத்தான் அப்படி என்று மக்களின் நம்பிக்கை.
3.மூலவரின் சந்நிதியிலேயே கொடிமரமும் உள்ளது.
4.நவக்கிரகங்களில் சனி மூலவரைப் பார்த்து அமர்ந்துள்ளார்.

ஆண்டுதொறும் பிள்ளையார் சதுர்த்தி அன்று துடங்கி அடுத்த 10 நாட்களூக்குப் பெருவிழா நடக்கும். புரட்டாசியில் சங்கடகர சதுர்த்தியில் புண்ணிய விழா (பவித்ரோற்சவம்)வும் நடைபெறும்.

நம்பிக்கைகள்:

குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு வந்தால் பாலகணபதிக்குப் பால் முழுக்காட்டு செய்ய வேண்டும்.
குழந்தை இல்லாதவர்கள் அருள்மிகு செல்வ கணபதிக்கு 33 தாமரைத் தண்டில் பசு நெய்யினால் தீபம் ஏற்றவேண்டும். மகாசங்கடகர சதுர்த்தியன்று விரதமிருந்து பாலபிடேகம் செய்து அருகம் புல்லால் அருச்சனை செய்யவேண்டும். மட்டைத் தேங்காயுடன் கோயிலை வலம்வந்து வன்னி மரத்தை வணங்கிப் பின் தேங்காயை கணபதிக்குக் கொடுக்கவேண்டும்.
தடைப்பட்ட திருமணம் நடக்க, மகாசங்கடகர சதுர்த்தியன்று விரதமிருந்து தீபம் ஏற்றி நவக்கிரகங்களை வழிபடல்வேண்டும்.

காலை 11.30 முதல் மாலை 4.30 வரை கோயில் மூடப்பட்டிருக்கும்.


ஆனைமுகன் – தஞ்சை

தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள யானைமுகத்தன்.

அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.


தாணுமாலய சாமி கோயில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்”தான்.

தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருக்கம்(தலவிருட்சம்) கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி கொடுத்தனர்.”
அதைக்குறிக்கும் முகத்தான் மும்மூர்த்தியும் ஒருமூர்த்தியாய் “தாணுமாலயன்” என்னும் நாமம் தாங்கி எழுந்தருளியிருக்கிறார்.
பெண்ணாசையால் பல குற்றம் புரிந்த இந்திரன் கவுதம முனியின் சினத்துக்கும் சாபத்துக்கும் ஆளானான். அப்பாவத்தைக் களைய, இந்திரன் சுசீந்திரம் தாணுமாலயனை வேண்டித் தூய்மை பெற்றான்.
“சுசி” என்றால் தூய்மை அடைதல் என்று பொருள். இந்திரன் ஈங்கு தூய்மை பெற்றதால் இத்தலம் சுசீந்திரம் என்று விளங்கலாயிற்று.ஒவ்வொரு இரவிலும் இந்திரன் இங்கு வந்து பெருமானை வணங்கிச் செல்லுவதாகக் கதை.

கன்னியாகுமரி அம்மை தல புராணத்திற்கும் சுசீந்திரம் தலபுராணத்திற்கும் தொடர்பு உண்டு என்கின்றனர். பூவுலகம் நடுங்கும் வண்ணம் பாணாசுரன் பல வகையில் கொடுமைகள் செய்து வந்தான். உடனே நம் தேவர்களும், முனிவர்களும் வழக்கப்படி “எங்களைக் காத்து அருளும்” என சிவனிடம் வேண்டினர். முன்னமேயே, “பாணாசுரன் ஒரு கன்னியினால் அழிவான்” என பிரமன் சாபமிட்டிருந்தான். ஆகவே, சிவன், தன் சக்தியான பார்வதியைப் பூவுலகிற்கு அனுப்பி வைத்தார். அம்மையோ, தாணுமாலயப் பெருமானை மணக்க விரும்பியதால் ஒரு நன்னாளில் நள்ளிரவில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நன்னாளில் பெருமான் கன்னியாகுமரி கிளம்பினார். திருமணம் நடந்தால் அசுரவதம் நடக்காதே எனக்கவலையுற்ற நாரதர், ஒரு சேவலாக அங்கு வந்து கூவ, குறித்த நேரம் தவறிவிட்டது என தாணுமாலயன் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைபட்டதால், கன்னியாகவே தவமிருந்து பாணாசுரனை அழித்து இன்னமும் கன்னித்தவத்தில் இருக்கிறாள் அம்மை.

சுசீந்திரத்தில் தாணுமாலயனுக்குத் திருமுழுக்காட்டு நடைபெற்றதும் அப்புனித நீர் நிலத்தடியே சென்று கன்னியாகுமரிக் கடலில் ஓர் இடத்தில் கலக்கிறது. அது “தாணுமாலயத் தீர்த்தம்” என அழைக்கப்படுகின்றது. கதையெல்லாம் முடிந்தது.

கோயிலின் பரப்பளவு – 5,400 சதுர அடி
அரச கோபுரத்தின் உயரம் – நூற்று முப்பத்தி நாலரை அடி

ஆங்குள்ள கல்வெட்டு ஒன்றினால், இவ்வாலயம் 1881ல் திருப்பணிகள் துடங்கி 1888ல் குடமுழுக்கு நடந்ததாக அறிகிறோம். இவ்வாலயம் பாண்டியர் காலக் கலை, நாகரீகம், பண்பாடு ஆகியவைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.

கணபதியைப் பெண்ணுருவில் செதுக்கியுள்ள சிற்பத்தை “விக்கினேசுவரி” என அழைக்கிறார்கள். இதுவன்றி, ஒரே கல்லில் செதுக்கிய சிற்பத்தில் கணபதியும், அவருக்கு இடப்பக்கத்தே அன்னை பார்வதியும் உள்ளனர்.இவைகள் வேறெங்கும் காணவியலா காட்சி. ஒரே கல்லில் செதுக்கிய நவக்கிரகங்களின் சிற்பங்களை மேற்கூரையில் அமைத்துள்ளனர்.

2000 ஆண்டுகள் பழமையான கொன்றை அடி தெற்கே உள்ளது. வடக்கே மாக்காளை எனும் நந்தியும், 18 அடி உயரமுள்ள அநுமனின் சிற்பமும் உள்ளது. இவ்வநுமன், கேட்போருக்குக் கேட்டதைக் கேட்டபடி தருபவர்.

நந்திக்கு தெற்கே கொன்றையடி நாதர் கோயில் உள்ளது. சுயம்பு இலிங்கமாக கொன்றை மரத்தடியில் வீற்றுள்ளார்.

மற்றபடி காணவேண்டியவை:
1.கலைநயம்கூறும் சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம்.
2.இசைத்தூண்கள் கொண்ட குலசேகர மண்டபம்.
3.திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம்.
4.வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம்.
5.பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை.

குலசேகர மண்டபத்தின் கீழ்புறத்தில் “அறம் வளர்த்த அம்மன்” கருவறை உள்ளது.சித்திர சபையில் சுவற்றை ஒட்டி, இராமபிரானின் கருவறைக்கு எதிரில் அநுமன் நெடிதுயர்ந்த தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தைத் தோண்டும்போது இச்சிலை கிட்டியதாம். 1929ல் இப்பொழுது இருக்கும் இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.

கருவறையில் தாணுமாலயப் பெருமான் இரண்டரை அடி உயரமுள்ள இலிங்க உருவில் அமைந்து அருள் பொழிகிறார்.இலிங்கத்தின் மேலே 16 சந்திர கலைகளுடன் படம் விரித்த நாகம். திருவிளக்கு பூசையில் பெண்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்துவது அவர்களின் நம்பிக்கையின் அடையாளம்.

விழாக்கள்:
1.அறம் வளர்த்த அம்மனுக்கும் தாணுமாலயப் பெருமானுக்கும் மாசி மாதம் திருக்கல்யாணம் நடக்கும்.
2.மாசி மாதம் நடக்கும் தேர்த் திருவிழாவில் கலந்துகொண்டு, பின்னர் கன்னியா குமரியை வணங்கப் பாவமெல்லாம் நசித்துப் போகும் என்ற அசைக்கமுடியா நம்பிக்கை நிலவுகிறது.


தஞ்சைப் பெரியகோயில் கோபுரம்

தஞ்சைப் பெரியகோயில் கோபுரம் வானளாவி நிற்கிறது. இக் கற்றளியை எழுப்ப எத்தனை மனிதர்கள் எப்படி இத்தனை பெரிய கற்களை மேலேற்றினரோ? அத்துடன் அதில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் நம்மை “ஆ” வென வாயைப் பிளக்க வைக்கிறது.


தஞ்சைப்பெரியகோயில்-நந்தி



நந்தி யிருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே யொழிந்தன
உந்தியி னுள்ளே யுதித்தெழுஞ் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனன்றே.


தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்


கண்டதொரு காட்சியென்ன அண்டபிண்டம்
……………கருவான ரவிமதியுஞ் சேர்ந்தமூலம்
ஒன்றான மூலமடா மவுனபீடம்
…………..ஓங்காரக் கம்பமடா நந்திவீடு
பண்பான வீடறிந்து சுழினைமேவி
…………..பார்மகனே போதமென்ற ஞானத்தீயை
குன்றான தீயதுதா னுந்தியுந்தி
………….குருவான செந்தீயடா சிகாரமாச்சே.