அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி
அருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்கோயில், அணைப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.
| மூலவர் | - | வீரஆஞ்சநேயர் | |
| பழமை | - | 1000 வருடங்களுக்கு முன் | |
| ஊர் | - | அணைப்பட்டி | |
| மாவட்டம் | - | திண்டுக்கல் | |
| மாநிலம் | - | தமிழ்நாடு |
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அம்மையநாயக்கனூர் ஜமீன்தாரான காமயசாமியின் கனவில் வீர ஆஞ்சநேயர் தோன்றி, வேகவதி ஆற்றின் தென்கரையில் (வைகை ஆற்றின் புராணப்பெயர்) தாழம்பூ புதருக்குள் சுயம்புவாக எழுந்தருளியிருப்பதாககவும், ஆலயம் அமைத்து வழிபடும்படியும் கூறினார். ஆஞ்சநேயரின் கட்டளைப்படி புதரைச் சுத்தம் செய்து பார்த்த போது சிறிய பாறை தென்பட்டது. அதை தோண்டி எடுக்க முயன்றும் முடியவில்லை. அதுவே வீர ஆஞ்சநேயராக, சுயம்புவாக மாறியது. பின்னர் அந்த இடத்தில் கோயில் அமைத்து வழிபாடு நடத்தப்பட்டது.
வாயு மைந்தனான ஆஞ்சநேயர் குழந்தையாக இருந்த போதே சூரிய பகவானை பழம் என்று நினைத்து அதைப்பறிக்க வானில் தாண்டிக்குதித்தவர். இராமனின் அடிமையாக திகழ்ந்த இவர் “ஸ்ரீராமஜெயம்” எழுதுபவர்களைப் பல இன்னல்களிலிருந்து காக்கிறார். இராமாயணமோ அல்லது இராமனின் பெருமைகளோ கூறும் இடங்களில் எல்லாம் அனுமன் இருப்பார். அந்த அளவுக்கு இராமர் மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
பெயருக் கேற்றார்போலவே இந்த ஆஞ்சநேயர் நின்ற திருகோலத்தில் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நிற்கிறார். அதேசமயம் அனுமனின் பக்தியும், கருணையும் வெளிப்படும் வகையில், ஒரு கண் அயோத்தியை பார்ப்பது போலவும், ஒரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு உதவும் கருணையுடன் பார்ப்பது போலவும் அமைந்துள்ளது.
ஆஞ்சநேயரின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியம் என்பதால் இங்கு நவக்கிரக பீடம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர், நாகர், சப்த கன்னிகள், கருப்பணசாமி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
துவாபரயுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வன வாசம் இருந்தனர். தற்போது வீர ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள சித்தர் மலையில் பாஞ்சாலியுடன் வந்து தங்கினர். அவர்களின் தாகத்திற்காக வாயுபுத்திரனான பீமன் தண்ணீர் தேடி இப்பகுதிக்கு வந்தான். அடர்ந்த காட்டின் நடுவே தண்ணீர் ஓடும் சத்தம். தண்ணீரை தேடிவந்த பீமனின் கண்களில்தான் சுயம்புமூர்த்தியான ஆஞ்சநேயர் தென்பட்டார். தருமனின் அனுமதியுடன் வீரனான பீமனே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்ததால் இவர் வீர ஆஞ்சநேயர் ஆனார்.
திருவிழா:
அனுமன் ஜெயந்தி, சித்ரா பவுர்ணமி, ஆடி அமாவாசை ஆகியவை முக்கிய திருவிழா. அமாவாசை காலங்களிலும் சனி மற்றும் புதன் கிழமைகளிலும் பக்தர்களின் கூட்டம் அதிகம்.
வேண்டுகோள்:
வீரம், நல்ல புத்தி, கலங்காத மனம், புத்தி சாதுர்யம், நல்ல படிப்பு, உடல் பலம், செய்யும் செயல்களில் வெற்றி ஆகியவற்றை தருவார். பணி மாற்றம் விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நல்ல பலன் உண்டு என பலன் அடைந்தவர்கள் கூறுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
அனுமன் ஜெயந்தியன்று முழு விரதம் இருக்க இயலாதவர்கள் பழம் மட்டும் சாட்பிட்டு ஸ்ரீராம ஜெயம் எழுதலாம். ஆஞ்சநேயர் பாடல்கள் பாடலாம். ஆஞ்சநேயர் கோயில் சென்று வழிபட்டு வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றி வழிபடலாம்.
| Tweet |
|
Posted: February 9th, 2012 under அநுமன், ஆலயங்கள், இதர திருக்கோயில்கள், திண்டுக்கல்.
Comments: none











Write a comment